Wednesday, July 3, 2013

திருக்குறள் - Thirukkural

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும், அழகுடன் இணைத்தும், கோர்த்தும் விளக்குகிறது. எதுவிதத்திலும், திருக்குறளை இயற்றியவர் பற்றியும், அது என்ன நூல் என்பது பற்றியும், ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது:
தேவர் குறளும் திரு நான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்றுணர்
இதில் ‘தேவர் குறள்‘ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், குறள், திரு நான்மறை, ஏனையவைகளும் ‘ஒரு வாசகம்‘ எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் வித்தகர்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத நிலைதான் தொடர்கிறது.
உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.[1]
திருக்குறள் நூலானது வடமொழியில் எழுதப்பட்டவைகளின் அடிப்படையில் இயற்றப்பட்டது என ஒரு சாராரராலும்,அது திருவள்ளுவனின் சுய சிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது என மற்றொரு சாராராலும் கருதப்படுகிறது.
மேலும், திருக்குறளில் கூறப்பட்டிருப்பவைகள் உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் உரிமைகோரப்பட்டு வருகிறது.

பொருளடக்கம்

நூற் பிரிவுகள்

திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் அதன் உயர்வு கருதி "திரு" என்ற அடைமொழியுடன் "திருக்குறள்" என்றும் பெயர் பெற்றது.
திக்குறளில் "பாயிரம்" என்னும் இயலில் நான்கு அதிகாரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் முதலாவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். அதைத்தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய அதிகாரங்கள். திருக்குறளின் அறத்துப்பாலில் பாயிரவியலைத் தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன் "இல்லறவியல்" அடுத்து 14 அதிகாரங்ள் கொண்ட துறவறவியல் இறுதியில் "ஊழ்" என்னும் ஒரே அதிகாரம் கொண்ட "ஊழியல்" என வகைபடுத்தப் பட்டுள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் "ஊழியல்" மட்டுமே. முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 34 அதிகாரங்கள்.
அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.
கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.
திருக்குறள் நூலமைப்பைப் பொறுத்தமட்டில், அது மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பாயிரத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களுள் கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், நீத்தார் பெருமை என்பவை மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகவும், வான் சிறப்பு மட்டும் மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு அப்பாற்ப்பட்டதாகவும் உள்ளது.
திருக்குறளின் மூன்று பால்களும், ஒவ்வொன்றிலும் 34 (பாயிரவியல் நீக்கி) , 70, 25 என்ற எண்ணிக்கையான அதிகாரங்கள் உள்ளதாக அமைக்கப்பட்டு, அந்த எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 7 என்ற கூட்டெண் வரும் விதத்திலும் நூல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டு மொத்த அதிகாரங்களான 133 இன் எண்களைக் கூட்டினாலும், கூட்டெண் 7ஆக வரும் விதத்திலேயே நூல் அமைக்கப்பட்டு்ள்ளது. ஒட்டு மொத்தத்தில், திருக்குறளின் நூலமைப்பானது 7 என்ற எண்ணுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், திருக்குறளின் நூலமைப்பானது 3, 4, 9, 10 என்ற எண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது. இவை தற்செயலாக நடைபெற்றதா? இல்லையா? என்பது பற்றியும், இவ்வெண்கள் எங்கேனும் தமிழரின் வாழ்வியலில் நெறிமுறைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா? இல்லையா? என்பது பற்றியும், இந்த எண்கள் ஒரு குறிப்பிட்ட போதனையில் முக்கியத்துவம் பெறுவதாக இருந்தால், அவை எவை தொடர்பானவை என்பதையும் இன்றுவரை ஆய்வாளர்கள் ஆராய்ந்து, எதனையும் கூறவில்லை.
மற்றைய புறத்தில், திருக்குறளின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களும் என்ன அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளன, அவைகள் ஏதாவது போதனை அடிப்படையில்தான் வைக்கப்பட்டுள்ளனவா, இல்லையா என்பது பற்றியும் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு, சரியான முடிவுக்கு வரப்படவில்லை.
திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

அறத்துப்பால்

பாயிரவியல்

  • கடவுள் வாழ்த்து
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாய் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை முதலாய் கொண்டிருக்கிறது.
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
பொருள்:தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருந்தால், அவர் கற்ற கல்வியினால் எந்த பயனும் இல்லை.
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
பொருள்:மனமாகிய மலரின்மீது சென்றுகொண்டிருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைவில் வைத்திருப்பவர் இப்பூமியில் அதிக காலம் மனநிறைவுடன் வாழ்வர்.

4. வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொருள்:எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாதவனாகிய கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத்தில் துன்பம் ஒருபோதும் ஏறபடுவது இல்லை.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
பொருள்:கடவுளின் உண்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
.
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
பொருள்:மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழியே பிறக்கும் தீய ஆசைகளை தவிர்த்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியை கொண்டவர் நீண்ட நெடுங்காலம் வாழ்வார்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
பொருள்:தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அல்லாமல், மற்றவர்களின் மனக்கவலையை மாற்ற முடியாது.
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
பொருள்:அறங்களின் கடலான கடவுளின் பாதங்களை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர்கள் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.
9.கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
பொருள்:எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், கண்கள்,செவிகள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பொருள்:இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். அல்லாதவர் கடக்க முடியாது.
  • வான்சிறப்பு
11. வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
பொருள்:உலகத்தை வாழ வைப்பது மழை என்பதால் அதுவே அமிழ்தம் ஆகும்.
12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.
பொருள்:யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் பயன்படுகிறது.
13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி.
பொருள்:மழை பெய்யாமல் பொய்த்துவிடுமானால், கடல் சூழ்ந்த பெரிய உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

14. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
பொருள்:மழை என்னும் வருவு குன்றிவிடும் எனில், உழவுத் தொழிலும் குறைந்துவிடும்

15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
பொருள்:மழையானது பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கிறது,அதேபோல் பெருமளவு பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்க்கிறது .

16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.
பொருள்:மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால்,உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
பொருள் ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். அதுபோல மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.

18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
பொருள்:மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் வழிபாடும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.

19. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
பொருள்:மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறருக்காக செய்யும் தானமும், தமக்காக செய்யும் தவமும் இல்லாமல் போகும்.

20. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.
பொருள்:எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

  • நீத்தார் பெருமை 
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.

பொருள்:தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை துறந்து வாழ்ந்த பெரியோர்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் மிகச்சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

பொருள்:ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைகளை , எண்ணிக்கையால் அளவிடுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை அளவிடுவது போலாகும்.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.

பொருள்:நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.
பொருள்:அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்கும் வல்லவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.
பொருள்:ஐம்புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு
பொருள்:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை துறந்தவனிடம் இவ்வுலகம் வசப்படும்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.
பொருள்:சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டுகிறது.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.
பொருள்:மலையளவு மனம் கொண்ட பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் மனதில் நிலையாய் நிற்காது.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். பொருள்:அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்

  • அறன் வலியுறுத்தல்

இல்லறவியல்

  • இல்வாழ்க்கை 
  • வாழ்க்கைத் துணைநலம்
  • புதல்வரைப் பெறுதல் 
  • அன்புடைமை 
  • விருந்தோம்பல் 
  • இனியவைகூறல் 
  • செய்ந்நன்றி அறிதல் 
  • நடுவு நிலைமை 
  • அடக்கமுடைமை 
  • ஒழுக்கமுடைமை 
  • பிறனில் விழையாமை 
  • பொறையுடைமை 
  • அழுக்காறாமை 
  • வெஃகாமை 
  • புறங்கூறாமை 
  • பயனில சொல்லாமை 
  • தீவினையச்சம் 
  • ஒப்புரவறிதல் 
  • ஈகை 
  • புகழ் 

துறவறவியல்

  • அருளுடைமை 
  • புலான்மறுத்தல் 
  • தவம் 
  • கூடாவொழுக்கம் 
  • கள்ளாமை 
  • வாய்மை 
  • வெகுளாமை 
  • இன்னாசெய்யாமை 
  • கொல்லாமை 
  • நிலையாமை 
  • துறவு 
  • மெய்யுணர்தல் 
  • அவாவறுத்தல் 

ஊழியல்

  • ஊழ்

பொருட்பால்

அரசியல்

  • இறைமாட்சி 
  • கல்வி 
  • கல்லாமை 
  • கேள்வி 
  • அறிவுடைமை 
  • குற்றங்கடிதல் 
  • பெரியாரைத் துணைக்கோடல் 
  • சிற்றினஞ்சேராமை 
  • தெரிந்து செயல்வகை 
  • வலியறிதல் 
  • காலமறிதல் 
  • இடனறிதல் 
  • தெரிந்துதெளிதல் 
  • தெரிந்து வினையாடல் 
  • சுற்றந்தழால் 
  • பொச்சாவாமை 
  • செங்கோன்மை 
  • கொடுங்கோன்மை 
  • வெருவந்த செய்யாமை 
  • கண்ணோட்டம் 
  • ஒற்றாடல் 
  • ஊக்கமுடைமை 
  • மடியின்மை 
  • ஆள்வினையுடைமை 
  • இடுக்கண் அழியாமை 

அமைச்சியல்

  • அமைச்சு
  • சொல்வன்மை
  • வினைத்தூய்மை 
  • வினைத்திட்பம்
  • வினைசெயல்வகை
  • தூது
  • மன்னரைச் சேர்ந்தொழுதல்
  • குறிப்பறிதல்
  • அவை அறிதல்
  • அவையஞ்சாமை

அங்கவியல்

  • நாடு 
  • அரண் 
  • பொருள் செயல்வகை 
  • படைமாட்சி 
  • படைச்செருக்கு 
  • நட்பு 
  • நட்பாராய்தல் 
  • பழைமை 
  • தீ நட்பு 
  • கூடா நட்பு 
  • பேதைமை 
  • புல்லறிவாண்மை 
  • இகல் 
  • பகைமாட்சி 
  • பகைத்திறந் தெரிதல் 
  • உட்பகை 
  • பெரியாரைப் பிழையாமை 
  • பெண்வழிச் சேறல் 
  • வரைவின் மகளிர் 
  • கள்ளுண்ணாமை 
  • சூது 
  • மருந்து 

ஒழிபியல்

  • குடிமை 
  • மானம் 
  • பெருமை 
  • சான்றாண்மை 
  • பண்புடைமை 
  • நன்றியில் செல்வம் 
  • நாணுடைமை 
  • குடி செயல்வகை 
  • உழவு 
  • நல்குரவு 
  • இரவு 
  • இரவச்சம் 
  • கயமை

காமத்துப்பால்

களவியல்

  • தகையணங்குறுத்தல் 
  • குறிப்பறிதல் 
  • புணர்ச்சி மகிழ்தல் 
  • நலம் புனைந்துரைத்தல் 
  • காதற் சிறப்புரைத்தல் 
  • நாணுத் துறவுரைத்தல் 
  • அலரறிவுறுத்தல் 

கற்பியல்

  • பிரிவாற்றாமை 
  • படர்மெலிந்திரங்கல் 
  • கண்விதுப்பழிதல் 
  • பசப்பறுபருவரல் 
  • தனிப்படர்மிகுதி 
  • நினைந்தவர் புலம்பல் 
  • கனவு நிலையுரைத்தல் 
  • பொழுது கண்டிரங்கல் 
  • உறுப்பு நலனழிதல் 
  • நெஞ்சொடு கிளத்தல் 
  • நிறையழிதல் 
  • அவர்வயின் விதும்பல் 
  • குறிப்பறிவுறுத்தல் 
  • புணர்ச்சிவிதும்பல் 
  • நெஞ்சொடுபுலத்தல் 
  • புலவி 
  • புலவி நுணுக்கம் 
  • ஊடலுவகை

உள்ளடக்கம்

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டுக் குறள்கள்

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." (திருக்குறள் - 423)
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு." (திருக்குறள் - 392)
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு." (திருக்குறள் - 788)

உரைகள்

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். திருக்குறளுக்குப் பலர் விளக்க நூல்களையும் எழுதியுள்ளனர். இவற்றுள் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது நூலாகும். உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்புகள்

திருக்குறள் தமிழ் தவிர இந்திய மொழிகளில் குஜராத்தி, இந்தி, கன்னடம், கொங்கணி மொழி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமற்கிருதம், சௌராட்டிர மொழி, தெலுங்கு போன்ற 13 மொழிகளிலும், ஆசிய மொழிகளில் அரபி, பருமிய மொழி, சீனம், பிஜியன், இந்தோனேசிய மொழி, யப்பானியம், கொரிய மொழி, மலாய், சிங்களம், உருது போன்ற 10 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவை தவிர ஐரோப்பிய மொழிகளான செக், டச்சு, ஆங்கிலம், பின்னிய மொழி, பிரெஞ்சு_மொழி, செருமன், அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, இலத்தீன், நார்வே மொழி, போலிய மொழி, ரஷிய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி ஆகிய 14 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[2]

திருக்குறள் நூலாராய்வு

திருக்குறள் நூலாராய்வானது இரண்டு அடிப்படைகளில் செய்யப்படவேண்டியுள்ளன. அவையாவன:
1) நூலின் அமைப்பு முறை
2) திருக்குறளில் கூறப்பட்டிருப்பவைகள்.

நூலின் அமைப்பு முறை

திருக்குறள் நூலின் அமைப்பானது 3, 4, 7, 9, 10 என்ற எண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சார் ஆய்வாளர்கள் 3, 4, 7, 9, 10 என்ற எண்கள் அனைத்தும் பௌத்த போதனையில்தான் அதிமுக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இச்சாரார் பௌத்த போதனையில் 3 என்ற எண்ணானது, மும்மணி (புத்தன்மணி, தம்மம் மணி, சங்கம் மணி), மூன்று படிகள்(சீலம், சமாதி, பஞ்ஞா), முப்பிடகம்(சுத்தபிடகம், அபிதம்த பிடகம், விநய பிடகம்) என்பவையுடாகவும்; 4 என்ற எண்ணானது, நான்கு பெரும் உண்மைகள் என்பதனூடாகவும்; 7 என்ற எண்ணானது, the Seven Links to Enlightenment என்பதூடாகவும்; 9 என்ற எண்ணானது, the Nine Conciousnesses என்பதூடாகவும்; 10 என்ற எண்ணானது, 10 சீலங்கள் (the Ten Precepts) என்பதூடாகவும் முக்கியம் பெறுகின்றன என்ற கருத்தினைக் கொண்டுள்ளனர்.
திருக்குறளின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள 4 அதிகாரங்களுள் முதலாவது அதிகாரமான ‘கடவுள் வாழ்த்து‘ அதிகாரத்தில் போற்றப்பட்டிருப்பது யார் என்பது தொடர்பாக, ஆய்வாளர்கள் மத்தியில் ஆதார பூர்வமான முடிவு இதுவரை எட்டப்படவில்லை.
இந்த அதிகாரத்தில் போற்றப்பட்டிருப்பவன் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், இறைவன் என்பவைகளால் விபரிக்கப்பட்டுள்ளான்.
வெவ்வேறு சாரார் இந்த விபரிப்புக்களுள் ஒருசிலவற்றை மாத்திரம் எடுத்து, அவை இன்ன இன்ன கடவுள்களுடன், அல்லது போதனையாளனுடன் ஒன்றுவதால், திருக்குறள் இன்ன சமயம் சார்ந்தது என்ற கருத்தினை முன்வைத்து, திருக்குறளானது ஜைனம், சைவம், வைணவம், வைதீகம், ... எனச் சகல சமயங்களுடனும் இணைக்கப்பட்டு வருகிறது.
எதுவித்திலும், திருக்குறளானது ஜைனம் சார்ந்தது என ஒரு பெரும் சாராரும், அது கடவுளைப் பொதுவான முறையில்தான் போற்றியுள்ளது என மற்றொரு சாராரும் கருதுகின்றனர்.
ஆனால், பிறவொரு சாரார், ‘கடவுள் வாழ்த்து‘ அதிகாரத்தில் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், இறைவன் என்பவைகளுடாகச் செய்யப்பட்டிருக்கும் விபரிப்புக்கள் பத்தும் புத்தபெருமானுடன் மாத்திரம்தான் ஒன்றும் என்ற கருத்தினை முன்வைத்ததுடன், ஏனைய ஆய்வாளர்கள் இந்தப் பத்தினுள் ஒருசில விபரிப்புக்களை மாத்திரம் வைத்து முடிவுக்கு வருவது தருக்கரீதியிலானது அல்ல என்ற வாதத்தினையும் முன்வைத்துள்ளனர்.
மேலும், ஆதிபகவன், வாலறிவன்,இறைவன் என்பவைகளின் பொருள்களைச் சரியாக அறிய, தமிழ் எழுத்து மொழியின் தொல்காப்பியன் குறிப்பிட்ட‘மொழிப் பொருட் காரணம்‘ அறிந்திருக்கப்படவேண்டும் என்ற வாதமும் அச்சாராரரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இச்சாரார் தமிழ் எழுத்து மொழியில், மூலத்தனியோலிகள் ஒவ்வொன்றும் 'தன்மை' (nature) அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு விபரிப்பினைச் செய்கிறது எனவும்; குறிப்பிட்டவொரு ஒழுங்கில் அமைக்கப்பட்ட பல்வேறு மூலத்தனியொலிகளின் இணைவால் உண்டாகும் பூரண விபரிப்பினைச் செய்யும் இணையொலியே ‘சொல்‘ எனவும்; குறிப்பிட்டவொரு பூரண விபரிப்பானது நாம் வாழும் சுற்றத்திலும், பிரபஞ்சத்திலும் என்னனென்ன பொருட்களில் அடையாளங்காணப்படுகிறதோ, அவைகள் எல்லாம் அச்சொல்லின் ‘பொருள்கள்‘ ஆகமுடியும் எனவும்; இவற்றுள் எவையெவைகளைப் பொருள்களாகக் கொள்ளும் ‘மரபு‘ இருந்து வந்துள்ளதோ, அதற்கேற்ப அவைகள் பொருள்களாகக் கொள்ளப்படும் என்ற முடிவையும் கொண்டுள்ளனர்.
மேலுமிச்சாரார், ‘எண்குணத்தான்‘ என்ற விபரிப்பானது சிவன், அருகன், புத்தபெருமான் என்பவைகளுடன் பொருந்தும்போதும், ‘அறவாழி அந்தணன்‘ என்ற விபரிப்புச் சிவனுடன் ஒன்றமாட்டாது என்பது போன்ற வாதங்களை வைத்து, வெவ்வேறு கடவுள்கள், போதனையாளர்களை நிராகரித்து, பத்து விபரிப்புக்களும் புத்தபெருமானுடன் மாத்திரம்தான் ஒன்றும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
திருக்குறளின் ‘கடவுள் வாழ்த்து,‘ ‘அறன் வலியுறுத்தல்,‘ ‘நீத்தார் பெருமை‘ என்ற மூன்று அதிகாரங்களும், முறையே புத்தன் மணி, தம்மம் மணி, சங்கம் மணி என்பவைகளைப் போற்றுவதால், இம்மூன்று அதிகாரங்களும் பௌத்த ‘மும்மணி‘யைப் போற்றுகின்றன என்கின்றனர் இச்சாரார்.
பூமியில் மனித இனம் நிலைக்க இனப்பெருக்கமும், நன்னீரும் அத்தியாவசியமான நிலையிலும், இல்லறம் இல்லையேல் துறவறம் நிலைக்கமுடியாது என்ற நிலையிலும், திருக்குறளின் அறத்துப்பாலில் இல்லறத்துக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது இச்சாராரின் வாதமாகும்.
நன்னீருக்குச் சூரியனின் வெப்பம் முக்கியமானதாக இருக்கும் நிலையிலும், சூரியன் அருகனுடன் இணைக்கப்படும் நிலையிலும், புத்தபெருமான் பூரணச் சந்திரனுடன் அடையாளப்படுத்தப்படும் நிலையிலும், பௌத்தம் சார்ந்த திருக்குறளின் ஆரம்பத்தில் சூரியன் போற்றப்படாது வானின் சிறப்பே போற்றப்பட்டுள்ளது என்பதும் இவர்களது வாதமாகும்.
இங்கு இலக்கிய ரீதியாகப் பௌத்தம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருக்குறள் ‘மஹாயாண‘ பௌத்தம் சார்ந்தது என்ற முன்முடிவுக்கு வந்துள்ள இச்சாரார்கள், பௌத்தம் வலியுறுத்துபவைகளும் (நான்கு பெரும் உண்மைகள், எண் குணங்கள், மூன்று படிகள், நடுவுப்பாதை, பத்துச் சீலங்கள், 12 நிதானங்கள், .... ), இவைகளைப் பூமியின் மனித வாழ்க்கையில் பிரயோகித்து ஒழுக்கங்களை வலியுறுத்தும் வகையிலும்தான், திருக்குறளின் அதிகாரங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்பது இச்சாரார்களது முடிவு ஆகும்.
இப்படியான ஒருங்கிணைக்கப்பட்ட ஆய்வினைத் திருக்குறளை ஆராய்ந்தவர்கள் இதுவரைகாலமும் செய்திருக்கவில்லை.
திருக்குறள் என்ன நூல் என்பதை இதுவரை காலமும் ஆராய்ந்தறியாத நிலையில், அதனை வெளியிட்டவர்கள் அதன் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் ஒழுங்கினைக் கடவுள் வாழ்தது, வான் சிறப்பு, நீத்தார் பெருமை,அறன் வலியுறுத்தல் என்ற ஒழுங்கில் அமைத்து வந்தமை பிழையானது எனவும், இந்த அதிகாரங்களினது ஒழுங்கானது கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், நீத்தார் பெருமை, வான் சிறப்பு என எதிர்கால வெளியீடுகளில் திருத்தி அமைக்கப்படவேண்டும் என்பதும் இச்சாராரின் முடிவாகும்
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர் . திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment