Thursday, July 11, 2013

பனை மரத்தின் இலை பனையோலை


பனை மரத்தின் உச்சியில் ஓலைகள் அமைந்துள்ள விதம்

பனை மரத்தின் இலை பனையோலை (பனை + ஓலை) எனப்படும். பனையோலை விசிறி போன்ற வடிவத்தையுடையது. ஏறத்தாழ ஐந்து அடி விட்டம் கொண்டதாக இருக்கும். பனம் மட்டை அல்லது பனை மட்டை என்று அழைக்கப்படும் இதனுடைய காம்பு உறுதியானது, அரை வட்ட வடிவமான குறுக்கு வெட்டுமுகம் கொண்டது. அத்துடன் இதன் விளிம்புகளில் கருநிறமான, வாளின் பற்கள் போன்ற அமைப்பு உள்ளது இது கருக்கு எனப்படும். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சோமசுந்தரப் புலவர் இந்தக் கருக்கை மன்னர்களின் வாளுக்கு ஒப்பிட்டு
உருக்கு வாளேந்திப் பகைசெற் றுலகினை
ஓம்பும் மணிமுடி மன்னவன் போல்
கருக்கு வாளேந்திக் கலியை அழித்திந்தக்
காசினியைக் காக்கும் ஞானப் பெண்ணே..
என்று இலக்கியச் சுவையுடன் பாடியுள்ளார்.
மறைப்பு வேலியொன்றில் பயன்படுத்தப்பட்டுள்ள பனையோலைகள்.
பனையோலைக் குருத்து இள மஞ்சள் நிறம் கொண்டது. விரிந்து முதிரும் போது கரும் பச்சை நிறமாகத் தோற்றமளிக்கும். காய்ந்து விழும் நிலையிலுள்ள ஓலைகள் மண்ணிறமாக ஆகி விடுகின்றன.

பயன்கள்

வேலிகளில் பனம் மட்டைகளின் பயன்பாடு.
ஒவ்வொரு நிலையிலும் இவ்வோலைக்கு வெவ்வேறு பயன்கள் உள்ளன. குருத்தோலைகளை வெட்டிக் காய விட்டு அதனைப் பயன்படுத்திப் பல விதமான கைப்பணிப் பொருட்கள் செய்யப்படும். பச்சை ஓலைகள் மாடுகளுக்கு உணவாவதுடன், வேலியடைத்தல், கூரை வேய்தல், முறம் செய்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப் படுகின்றன. மட்டைகளும், வேலியடைத்தல், குடிசைகள் அமைத்தல், பலவகை நார்களின் உற்பத்தி ஆகியவற்றில் உதவுகின்றன. காய்ந்து விழும் ஓலைகளும் பயிர்களுக்கு உரமாகின்றன.

No comments:

Post a Comment