இரண்டாம் உலகப் போரின் கூட்டணிகள். அடர் பச்சை: பேர்ல் துறைமுகத் தாக்குதலுக்கு முன்னரான நேச நாடுகள்; இளம் பச்சை: பேர்ல் துறைமுகத் தாக்குதலுக்குப் பின் நேசநாடுகளாக இணைந்தவை; நீலம்: அச்சு அணி; சாம்பல்: நடுநிலை நாடுகள்.
இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப்போர் 2 (World War II, அல்லது Second World War) 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர். இதில் அனைத்து பெரும் அரசுகள் (great powers) உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. இவை அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்திருந்தன. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். ஒட்டுமொத்த போர் என்னும் கோட்பாட்டிற்கு இணங்க, இப்போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழிக்க முயன்றன. இதனால் இராணுவ மற்றும் குடிசார் வளங்களுக் கிடையேயான வேறுபாடு மறைந்து போனது. பெரும் இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படித்திய போராகும்.
செப்டம்பர் 1, 1939ல் நாசி ஜெர்மனியின் போலந்து படையெடுப்புடன் இப்போர் துவங்கியதாக பொதுவாக வரலாற்றாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு புறம் பிரிட்டன் அதன் பேரரசில் இடம் பெற்றிருந்த நாடுகள் பிரான்சு ஆகியவை நேச நாட்டு அணியிலிருந்தன. மறுபுறம் நாசி ஜெர்மனி மற்றும் பாசிச இத்தாலி ஆகியவை சேர்ந்து அச்சு அணியை உருவாக்கின. 1939-41ல் அச்சுப் படைகள் மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றின. பிரிட்டன் மட்டும் அவற்றின் பிடியிலிருந்து தப்பியது. பின் வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயன்றன. ஜூன் 1941ல் அச்சுப் படைகள் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்ததால் சோவியத் ஒன்றியம் நேச நாட்டு அணியில் இணைந்தது. 1930களின் துவக்கத்திலிருந்து சீனா மீது போர் தொடுத்து அதன் பல பகுதிகளைக் ஆக்கிரமித்திருந்த சப்பானியப் பேரரசும் அச்சு அணியில் இணைந்தது.
டிசம்பர் 1941ல் ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம் சப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. அதுவரை நேச நாடுகளுக்கு தளவாட வழங்கலை மட்டும் செய்து வந்த அமெரிக்காவும் போரில் நேரடியாக ஈடுபட்டது. சப்பானியப் படைகள் விரைவில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவின் கிழக்கெல்லை வரை முன்னேறி விட்டன. 1942 வரை அச்சு நாடுகளுக்கு சாதகாமாக இருந்த போர் நிலவரம் அவ்வாண்டு நேரெதிரானது. ஐரோப்பாவின் கிழக்கு முனையில் அச்சு நாட்டு முன்னேற்றம் சோவியத் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆப்பிரிக்காவிலும் அச்சுப் படைகள் முறியடிக்கப்பட்டு பின்வாங்கின. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் நேச நாட்டு படைகள் இழந்த பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றத் தொடங்கின. 1943ல் இத்தாலி மீது நேச நாட்டுப் படைகள் படையெடுத்தன; விரைவில் அந்நாடு சரணடைந்தது. 1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்க நேச நாட்டுப் படைகள் கடல் வழியாகப் படையெடுத்தன. கிழக்கில் சோவியத் படைகளாலும் மேற்கில் பிரிட்டானிய, அமெரிக்க, பிரெஞ்சுப் படைகளாலும் தாக்கப்பட்ட ஜெர்மனி ஈராண்டுகளுக்குள்ளாக தோற்கடிக்கப்பட்டது. மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. 1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றி சப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் சப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணு குண்டுகளை வீசியது. இதன் விளைவாக சப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.
இப்போரின் விளைவாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய பேரரசுகள் தங்கள் வல்லமையை இழந்தன; ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காலனிமயமழித்தல் தொடங்கியது. அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் புதிய வல்லரசுகளாகின; அவற்றுக்கு இடையே பனிப்போர் துவங்கியது. உலக அமைதிக்காக செயல்பட ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.
பொருளடக்கம் |
கால கட்டம்
முதன்மைக் கட்டுரை: இரண்டாம் உலகப்போர் நிகழ்வுகளின் கால வரிசை
இரண்டாம் உலகப் போரின் தொடக்கமாக போலந்தின் மீதான ஜெர்மன் படையெடுப்பு
நடந்த செப்டம்பர் 1, 1939 கருதப்படுகிறது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்
இரண்டு நாட்களுக்கு பின்னர் ஜெர்மனி மீது போரை அறிவித்தன. பலர் போரின் தொடக்கமாக இரண்டாம் சீன-ஜப்பானிய போர் தொடங்கிய ஜூலை 7, 1937 நாளை குறிப்பிடுகின்றனர்.ஆங்கில வரலாற்றாசிரியர் ஏ.ஜே.பி. டெய்லர் (A.J.P. Taylor) கூற்றுப்படி, கிழக்காசியாவின் சீன-ஜப்பானிய போரும், ஐரோப்பிய மற்றும் அதன் காலனி நாடுகளை உள்ளடக்கிய இரண்டாம் ஐரோப்பிய போரும் தனித்தனியாக நடைபெற்று வந்தது. இந்த இரண்டு போர்களும் 1941ல் இணைந்து உலகளாவிய போராக உருவெடுத்து 1945 வரை தொடர்ந்தது.
இரண்டாம் உலகப்போரின் இறுதி நாள் குறித்து ஒத்த கருத்து எதுவும் எட்டப்படவில்லை. இரண்டாம் உலகப்போர், ஜப்பான் வீழ்ந்த, ஆகஸ்ட் 14, 1945 அன்று முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டாலும் ஜப்பான் செப்டம்பர் 2, 1945 அன்றுதான் அதிகாரப்பூர்வமாக சரணடைந்தது. சில ஐரோப்பிய வரலாற்று நூல்கள் ஜெர்மனி தோல்வியடைந்த, மே 8, 1945ம் நாளை குறிப்பிடுகின்றன. எனினும் ஜப்பான் உடனான நேச நாடுகளின் அமைதி ஒப்பந்தம் 1951ல்தான் கையெழுத்தானது.
போரின் பின்னணி
முதல் உலகப்போரில் மைய சக்தி நாடுகளான ஆஸ்திரிய-ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சி, ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் மற்றும் ராஜதந்திர நிலவரங்களை வெகுவாக மாற்றியது. 1917ல் ரஷ்ய பொதுவுடைமைக் கட்சியின் போல்ஷெவிக் பிரிவு ரஷ்யாவில் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கிடையில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, செர்பியா, மற்றும் ருமேனியா ஆகிய நேச நாடுகளின் வெற்றி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் ரஷ்சிய பேரரசின் சரிவால் உருவான புதிய நாடுகள் ஆகியவை கிழக்கு ஐரோப்பாவின் வரைபடத்தில் பெரிய மாற்றங்களை உண்டாக்கின. போருக்கு பிறகு ஐரோப்பாவில் அமைதியின்மை நிலவியது. வெர்சாய் உடன்படிக்கையின்படி, ஜெர்மனி பொருளாதார, பிராந்திய மற்றும் காலனியாதிக்க ரீதியாக நிறைய இழப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஜெர்மனி தனது நிலப்பரப்பில் பதின்மூன்று சதவீதத்தையும் தனது அனைத்து காலனிகளையும் இழந்தது. மேலும் ஜெர்மனி மீது ராணுவ ரீதியான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையில் ரஷ்ய உள்நாட்டு போரின் விளைவாக சோவியத் யூனியன் உருவாகியது. 1924ல் லெனினின் மரணத்திற்கு பிறகு சோவியத் யூனியனின் அதிகாரத்திற்கு வந்த ஜோசப் ஸ்டாலின், புதிய பொருளாதார கொள்கைகளுக்கு பதிலாக ஐந்தாண்டுத் திட்டங்களை அமல்படுத்த தொடங்கினார்.ஜெர்மன் பேரரசு 1918-19 ஜெர்மன் புரட்சியில் கலைக்கப்பட்டு, ஒரு ஜனநாயக அரசு உருவானது. போர்களுக்கு இடையிலான காலத்தில், ஜெர்மனி தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இடையே உள்நாட்டு மோதல்கள் ஏற்பட்டது. இதே போன்ற நிலைமை இத்தாலியிலும் உருவானது. நேச நாடுகளின் அணியில் இருந்து இத்தாலி சில பிராந்திய வெற்றியை அடைந்தது என்றாலும், இத்தாலிய தேசியவாதிகள் லண்டன் உடன்படிக்கை மீது கோபம் கொண்டிருந்தனர். 1922 முதல் 1925 வரை, பெனிட்டோ முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிச இயக்கம் புதிய ரோமானிய பேரரசை உருவாக்கும் உறுதியுடன் அதிகாரத்தை கைப்பற்றியது. ஜெர்மனியில், அடோல்ப் ஹிட்லர் தலைமையிலான நாட்சி கட்சி ஆட்சியை பிடித்து, 1933 இல், ஹிட்லர் அதிபர் ஆனார்.
சீனாவில் குவோமின்டாங் கட்சி 1920களில் சீன ஒருங்கிணைப்புக்கான ராணுவ நடவடிக்கையை குறுநில மன்னர்களுக்கு எதிராக தொடங்கியது. ஆனால் விரைவிலேயே அதன் முன்னாள் சீன கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு எதிராக உள்நாட்டு போரில் இறங்கியது. நீண்ட நாட்களாக சீனாவை ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் இருந்த ஜப்பான், 1931ல், மஞ்சூரியன் சம்பவத்தை காரணமாக வைத்து மஞ்சூரியாவை ஆக்கிரமித்து மஞ்சுகோ என்று அழைக்கப்பட்ட பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. ஜப்பானை எதிர்க்க வலு இல்லாத சீனா, உலக நாடுகள் சங்கத்திடம் உதவி கோரியது. உலக நாடுகள் சங்கம் ஜப்பானை மஞ்சூரிய ஆக்கிரமிப்புக்காக கண்டித்தது. அதனால் ஜப்பான், உலக நாடுகள் சங்கத்தில் இருந்து விலகியது. பின்னர் இரண்டு நாடுகளும் 1933ல் Tanggu போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் வரை, ஷாங்காய், ரேஹே மற்றும் ஹெபெய் பகுதிகளில் பல சிறு மோதல்களில் இறங்கின. அதன் பின்னரும் சீன தன்னார்வ படைகள் மஞ்சூரியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்தன.
அடால்ஃப் ஹிட்லர், 1923ல் ஜெர்மன் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வி பிறகு, 1933ல் ஜெர்மனின் அதிபர் ஆனார். அவர் சனநாயகத்தை ஒழித்து நாஜிக்கொள்கையை அறிமுகப்படுத்தினார். அதோடு வெர்சாய் உடன்படிக்கையை மீறும் விதமாக ராணுவ சீர்திருத்த நடவடிக்கைகளையும் ஆயுத கொள்வனவுகளையும் செய்யத் தொடங்கினார். இதற்கிடையில் பிரான்ஸ், இத்தாலியுடன் கூட்டணி வைக்கும் எண்ணத்துடன், இத்தாலிக்கு எதியோப்பியா மீதான காலனி ஆக்கிரமிப்பை அனுமதித்தது. 1935ல், ஜெர்மனி சார் பேசின் பகுதியை சட்டபூர்வமாக தன்னுடன் இணைத்து கொண்டதால் நிலைமை இன்னும் மோசமடைந்தது.
ஜெர்மனி கட்டுப்படுத்த நினைத்த, ஐக்கிய ராஜ்யம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகள் Stresa முன்னணி அமைப்பை உருவாக்கின. கிழக்கு ஐரோப்பாவின் பரந்த பகுதிகளை கைப்பற்றும் ஜெர்மனியின் நோக்கங்களால் கவலையடைந்த சோவியத் யூனியன், பிரான்ஸ் உடன் பரஸ்பர உதவி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் முன்பாக, உலக நாடுகள் சங்கத்தின் ஒப்புதலுக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவ்வளவாக பயன் தராமல் போனது. எனினும், ஜூன் 1935 ல், ஐக்கிய ராஜ்யம் ஜெர்மனி உடன் ஒரு சுயாதீன கடற்படை ஒப்பந்தம் செய்து, சில கட்டுப்பாடுகளை தளர்த்தியது. ஐரோப்பா மற்றும் ஆசிய நிகழ்வுகளை பற்றி கவலை கொண்ட அமெரிக்கா, ஆகஸ்ட் மாதம் நடுநிலைத்தன்மை சட்டத்தை நிறைவேற்றியது. அக்டோபர் மாதம், இத்தாலி எத்தியோப்பியா மீது படையெடுத்தது. இந்த படையெடுப்புக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்ததால் அதற்கு பிரதி பலனாக இத்தாலி, ஜெர்மனியின் ஆஸ்திரிய ஆக்கிரமிப்பு நோக்கத்தின் மீதான ஆட்சேபணைகளை திரும்ப பெற்றது.
ஹிட்லர் வெர்சாய் மற்றும் லோகர்னோ உடன்படிக்கையை மீறி Rhineland பகுதியில் ராணுவத்தை குவித்தார். இதற்கு மற்ற ஐரோப்பிய வல்லரசுகளிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு வரவில்லை. ஜூலையில் ஸ்பெயின் உள்நாட்டு போர் தொடங்கிய போது, ஹிட்லரும் முசோலினியும் 'பாசிச தேசியவாத படைகளையும்', சோவியத் யூனியன் ஸ்பானிய குடியரசையும் ஆதரித்தன. இரண்டு தரப்புமே இந்த சண்டையை தங்களது புதிய ஆயுதங்களையும் போர் தந்திரங்களையும் பரிசோதிக்க பயன்படுத்தி கொண்டன. 1939 ஆம் ஆண்டு தேசியவாதப்படைகள் போரை வென்றன. அக்டோபர் 1936 இல், ஜெர்மனியும் இத்தாலியும் அச்சு நாடுகள் அமைப்பை உருவாக்கின. ஒரு மாதம் கழித்து, ஜெர்மனியும் ஜப்பானும் அனைத்துலக பொதுவுடைமை இயக்க எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒரு வருடம் கழித்து இத்தாலியும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தது. சீனாவில் Xi'an சம்பவத்திற்கு பிறகு குவோமின்டாங் மற்றும் கம்யூனிச படைகள் ஜப்பானை எதிர்த்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கும் பொருட்டு யுத்த நிறுத்தத்தை அறிவித்தன.
போருக்கு முந்தைய நிகழ்வுகள்
இத்தாலியின் எத்தியோப்பிய ஆக்கிரமிப்பு
முதன்மைக் கட்டுரை: இரண்டாம் இத்தாலிய-அபிசீனிய போர்
இரண்டாம் இத்தாலிய-அபிசீனிய போர், அக்டோபர் 1935 ல் தொடங்கி மே 1936 இல் முடிவடைந்த ஒரு சுருக்கமான காலனித்துவ போர். இந்த போர் இத்தாலிய பேரரசின் ஆயுதப்படைகளுக்கும் எத்தியோப்பிய பேரரசின் (அபிசீனியா)
ஆயுதப்படைகளுக்கும் இடையே நடந்தது. போரின் முடிவில் இத்தாலி வெற்றி பெற்று
எத்தியோப்பியாவில் தனது காலனியை நிறுவியது. இதனால் எத்தியோப்பியா கிழக்கு ஆப்பிரிக்க இத்தாலியில்
இணைக்கப்பட்டது. இந்த போர் உலக நாடுகள் அமைப்பு அமைதியை நிலை நாட்டும் ஒரு
வலுவான அமைப்பாக இல்லை என்பதை வெளிப்படுத்தியது. இத்தாலியும்
எத்தியோப்பியாவும் உலக நாடுகள் அமைப்பின் அங்கத்தினர்களாக இருந்த போதிலும்
அந்த அமைப்பு இத்தாலியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஸ்பானிய உள்நாட்டு போர்
முதன்மைக் கட்டுரை: எசுப்பானிய உள்நாட்டுப் போர்
ஸ்பானிய உள்நாட்டு போர், 1 ஏப்ரல் 1939 முதல் 17 ஜூலை 1939 வரை
ஸ்பெயினில் நடந்த பெரிய உள்நாட்டு போர். ஜெர்மனி மற்றும் இத்தாலி,
கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான தேசியவாத படைகளுக்கு
ஆதரவு கொடுத்தன. சோவியத் யூனியன் தனது ஆதரவை இடதுசாரி சிந்தனை உடைய அங்கு
ஏற்கனவே ஆட்சியில் இருந்த ஸ்பானிய குடியரசுக்கு கொடுத்தது. ஜெர்மனியும்
சோவியத் ஒன்றியமும் இந்த சண்டையை தங்களது புதிய ஆயுதங்களையும் போர்
தந்திரங்களையும் பரிசோதிக்க பயன்படுத்தி கொண்டன. ஜெர்மனியின் கொண்டோர் லீஜியன் திட்டமிட்டு நிகழ்த்திய ஜெர்னீகா குண்டுவீச்சு அடுத்த பெரிய போர் பொதுமக்கள் மீது பயங்கரவாத குண்டு தாக்குதல்களை உள்ளடக்கலாம் என்ற பரவலான கவலைகளுக்கு பங்களித்தது.ஜப்பானின் சீன ஆக்கிரமிப்பு
முதன்மைக் கட்டுரை: இரண்டாம் சீன-சப்பானியப் போர்
ஜூலை 1937ல், ஜப்பான், மார்கோ போலோ பாலம் சம்பவம் நடந்த பிறகு, சீனாவின் முந்தைய தலை நகரான பெய்ஜிங்கை
கைப்பற்றியது. இந்த சம்பவம் ஜப்பான் முழுமையான சீன ஆக்கிரமிப்பு நடவடிக்கை
எடுக்க வித்திட்டது. இந்த நேரத்தில் விரைவாக செயல்பட்ட சோவியத்,
சீனாவுக்கு தளவாடங்கள் வழங்கி உதவி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்
மூலம் சீன - ஜெர்மனி ஒத்துழைப்பு (1911 - 1941) முடிவுக்கு வந்தது. சீனப் போர்ப்படை தளபதி சங் கை செக் ஷாங்காய்
நகரத்தை பாதுகாக்க ஜெர்மனியால் பயிற்றுவிக்கப்பட்ட தனது சிறந்த படைபிரிவை
பயன்படுத்தியும் மூன்று மாதங்களுக்கு பிறகு ஷாங்காய் நகரம் ஜப்பானியர்கள்
வசம் வீழ்ந்தது. ஜப்பானிய படைகள் சீனப்படைகளை பின்தள்ளி முன்னேறி டிசம்பர்
1937ல் தலைநகர் நாஞ்சிங்கை கைப்பற்றின. இதன்பின் நடந்த நாஞ்சிங் படுகொலை
சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் சரணடைந்த சீன வீரர்களும்
கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான சீனப்பெண்கள் ஜப்பானிய ராணுவ வீரர்களால்
கற்பழிக்கப்பட்டனர்.ஜூன் 1938ல், சீன படைகள் ஜப்பானிய படைகளின் முன்னேற்றத்தை தடுக்க மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தின. இதன் மூலம் சீனப்படையினருக்கு வுஹன் (Wuhan) நகரத்தில் தற்காப்பு முயற்சிகள் எடுக்க சிறிது நேரம் கிடைத்தது. ஆனாலும் வுஹன் நகரம் அக்டோபர் மாதத்தில் ஜப்பானிய படையினரிடம் வீழ்ந்தது. ஜப்பானியர்கள் எதிர்பார்த்தது போல் இந்த வெற்றிகளால் சீனர்களின் எதிர்ப்பை முறியடிக்க முடியவில்லை. சீன அரசாங்கம் தனது இருப்பிடத்தை நாட்டின் உட்பகுதிக்கு மாற்றி அங்கிருந்து போரை தொடர்ந்தது.
ஜப்பானின் சோவியத் யூனியன் மற்றும் மங்கோலிய ஆக்கிரமிப்பு
முதன்மைக் கட்டுரை: சோவியத்-ஜப்பானிய எல்லைப் போர்கள்
1938 ம் ஆண்டு ஜூலை 29 அன்று, ஜப்பானிய படைகள் சோவியத் ஒன்றியத்தில் நுழைந்ததும் காசன் ஏரிப்போர்
மூண்டது. இந்த சண்டையில் சோவியத் வெற்றி அடைந்தாலும் ஜப்பான் போரின்
முடிவை தோல்வி என்று ஒப்புக்கொள்ளவில்லை. இதற்குப் பின்னும்
ஜப்பானிய-மங்கோலியன் எல்லையை விரிவாக்க 11 மே 1939 அன்று கல்கின் கோல் நதிப்போரை தொடங்கியது. ஜப்பானிய தாக்குதல் முதலில் சிறிது வெற்றி அடைந்தாலும் பின் சோவியத் படைகளிடம் ஜப்பானிய படைகள் பெரிய தோல்வியை தழுவின.இந்த மோதல்களின் முடிவுகளால் ஜப்பானிய அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் சீனப்போரில் சோவியத் ஒன்றியத்தின் தலையீட்டை தவிர்க்க சோவியத் ஒன்றியத்துடன் சமாதானமாக செல்ல வேண்டும் என்று கருதத் தொடங்கினர். அதற்கு பதிலாக அவர்கள் ஜப்பானிய அரசாங்கம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் கவனம் செலுத்த விரும்பினர்.
ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள்
ஐரோப்பாவில், ஜெர்மனியும் இத்தாலியும், பல வெளிப்படையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தன. மார்ச் 1938 இல், ஜெர்மனி ஆஸ்திரியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது. ஆனாலும் பிற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து பெரிய அளவில் ஆட்சேபனைகள் எழவில்லை. இதனால் உந்தப்பட்ட ஹிட்லர் செக்கோஸ்லோவாக்கியாவின் ஜெர்மானியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியான சுதேண்டேன்லாந்துவை ஜெர்மனியின் ஒரு பகுதியாக கோர ஆரம்பித்தார். விரைவிலேயே பிரிட்டனும் பிரான்சும் செக்கோஸ்லோவாக்கியா அரசின் விருப்பத்திற்கு எதிராக இந்த பகுதியை ஜெர்மனுக்கு விட்டுக்கொடுத்தன. இதற்கு பதிலாக ஜெர்மனியும் வேறெந்த நிலப்பகுதியின் மீதும் உரிமை கோரப்படாது என்று உறுதி அளித்தது. இதற்குப் பின்னும், ஜெர்மனியும் இத்தாலியும், செக்கோஸ்லோவாக்கியா தனது நிலப்பரப்பை ஹங்கேரிக்கும் போலந்திற்கும் விட்டு கொடுக்க வைத்தன. மார்ச் 1939 ல் ஜெர்மனி, செக்கோஸ்லோவாக்கியாவின் எஞ்சிய பகுதிகளை ஆக்கிரமித்தது. பின் நாட்டை இரண்டாகப் பிரித்து ஸ்லோவாக் குடியரசு எனும் பகுதியையும் பொஹிமியா மற்றும் மொராவியா பாதுகாக்கபட்ட பகுதியையும் உருவாக்கியது.ஹிட்லர் டான்ஜிக் பகுதியின் மீது உரிமை கோர ஆரம்பித்தும் விழித்துக் கொண்ட பிரிட்டனும் பிரான்சும், போலந்தின் சுதந்திரத்திற்கு உதவி செய்வதாக உறுதி அளித்தன. இத்தாலி அல்பேனியாவை கைப்பற்றியதை தொடர்ந்து இதே உறுதி மொழி ருமேனியாவிற்கும் கிரீசுவிற்கும் அளிக்கப்பட்டது. போலந்திற்கு பிரிட்டன்-பிரெஞ்சு உறுதி மொழியைத் தொடர்ந்து ஜெர்மனியும் இத்தாலியும் நட்புறவு மற்றும் கூட்டணிக்கான இரும்பு ஒப்பந்தம் செய்து கொண்டன.
ஆகஸ்ட் 1939 இல், ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் தங்களின் மற்ற நாடுகளுடனான போர்களின் போது பரஸ்பரமாக நடுநிலை வகிக்கும் ரகசிய மொலோடோவ்-ரிப்பன்ட்ராப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான அரசியல் மற்றும் பிராந்திய உரிமைகளை வரையறுத்துக் கொண்டன. மேற்கு போலந்து (இரண்டாம் போலந்துக் குடியரசு) மற்றும் லித்துவேனியா மீது செல்வாக்கு செலுத்தும் உரிமை ஜெர்மனிக்கும் கிழக்கு போலந்து, பின்லாந்து, எசுத்தோனியா, லாத்வியா மற்றும் பெஸ்ஸரேபியா பகுதிகளின் மீதான உரிமை சோவியத் ஒன்றியத்துக்கும் கிடைத்தது. இதன் மூலம் போலந்து விடுதலை கேள்விக்குறியானது.
No comments:
Post a Comment