Friday, June 28, 2013

குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் காலை உணவு

குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் காலை உணவு
காலை உணவு சாப்பிடும் குழந்தைகளின் பேச்சு திறன், செயல்பாட்டு திறன் அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இரவு உணவுக்கு பின்பு, நீண்ட நேரத்துக்கு பின்பு, காலை உணவு உண்பது உடலுக்கு மட்டுமல்ல, மூளை செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

காலை உணவு சாப்பிடாத குழந்தைகளுக்கும் தொடர்ந்து காலை உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய அமெரிக்காவின் பென்சில்வேலியாவில் உள்ள "ஸ்கூல் ஆப் நர்சிங்" பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

சீனாவில் உள்ள 1,269 குழந்தைகளிடம் ஆறு ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் காலை உணவு சாப்பிடாத குழந்தைகளின் பேச்சு திறன் மற்றும் செயல்பாட்டு திறன் ஆகியவை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், அடிக்கடி அல்லது தொடர்ந்து காலை உணவு சாப்பிடும் குழந்தைகள் நல்ல அறிவு திறன் கொண்டவர்களாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து ஆய்வின் தலைவர் ஜியாங்ஹாங் லியூ கூறுகையில், குழந்தைகளின் அறிவு திறன் அதிகரிக்க போதுமான உணவு அவசியம். காலை உணவு சாப்பிடாத குழந்தைகளுக்கு உடனடி மற்றும் நீடித்த பாதிப்புகள் ஏற்படும்.

குழந்தை பருவத்தில் ஏற்படும் நடத்தை குறைபாடுகளையும், வளர்ந்த பின்பு சமூகத்தை எதிர்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களையும் தடுக்க குழந்தைகள் காலை உணவு உண்பது அவசியம்.

எனவே, குழந்தையின் காலை உணவில் பெற்றோர் அக்கறை செலுத்துவதுடன் பள்ளிகளும் போதிய நேரத்துக்கு பின்பு வகுப்புகளை தொடங்குதல் அல்லது பள்ளியிலேயே குழந்தைகளுக்கு உணவு அளித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment